புதன், 17 செப்டம்பர், 2025

அமைதியே காதலாகி..

 நள்ளிரவில்
குளிர் நிலவின் கீழ்
அலைபாயும் என் ஆன்மாவை
தடுக்கும்
தீக்கனி தொடுதல்களே
உன் நினைவுகள்...

உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல் 
துடிக்கிறது ...
இரண்டாம் இதயமாய்,
மெதுவாய் ,
என்னுடையதாய் ...
இருளில் மறையும் தீச்சுடராய் ,
அமைதியே காதலாகி,
கசிந்துருகிறது!

நீ எங்கோ

 காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து 
உனை அடைய..! 

உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது.. 

ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..

நான்
நிழல்களில்
நடக்கிறேன்,

நீ எங்கோ ..

காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤


வியாழன், 4 செப்டம்பர், 2025

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முதல் எழுத்தை கற்ற நாள் 

கையில் பேனா கொடுத்தீர்,

மனதில் ஒளியேற்றினீர்...


பிழைகள், 

பேத்தல்கள்,

தடுமாற்றங்கள்,

அனைத்தையும் பொறுத்து

சொற்களால் செதுக்கினீர் 

எம்மை ஒரு நல்மனிதனாக...


தாயக அணைத்தீர்,

தந்தையாக வழி நடத்தினீர் ,

தோழன் போல தோள்நின்றீர்,

உலகம் என் முன் திறந்த போது,

நத்தைச் சிப்பியில் அடைக்கப்பட்டிருந்த

அடர் கனவுகளை, 

உடைந்த என் கனவுகளை ,

திரும்ப ஒட்டி 

நிஜமாக்கி நகர்ந்தீர்...


ஒவ்வொரு பாடத்திலும்

வார்த்தைகளோடு,

சிந்தனைக்கு சுடர் புகட்டி,

மனசாட்சியையும் விதைத்தீர்.

அறிவை மட்டும் அல்ல,

உணர்ச்சியையும் கற்றுக்கொடுத்தீர்..!


காலம் கடந்து

நான் முன்னேறுகையில்,

நிழலாய் நின்று உணர்த்திணீர்,

பண்பினை...

என் வெற்றியின் ஒவ்வொரு பக்கத்திலும்

உந்தன் கையொப்பமே...


ஆசிரியர் தினம் ஒரு நாளே,

ஆனால் உந்தன் ஆசிகள், 

எமக்கு 

எந்நாளுமே!!

நான் வணங்குவது

உந்தன் அறிவை மட்டுமல்ல,

உந்தன் அன்பையும்,

அர்ப்பணிப்பையும் சேர்த்து  தான்...

அன்பு வணக்கங்கள்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!!

நன்றியுடன்,


ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

உன் நினைவில் . . .

மூன்று ஆண்டுகள் உருண்டோடிய 
உன்னை பிரிந்து நாங்கள் வாழ தொடங்கி. 
எங்கிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய் நீ? 
எப்போழுது வருவாய் நீ? 
பற்பல கேள்விகள் எங்களுக்குள் . 
இருளா நீ , 
ஒளியானயா நீ?
கதிரா நீ , 
மழையானாயா நீ?
அழுகுரலா நீ ,
சரணகோஷமானயா நீ?
உன்னை தீ விழுங்க, 
நாங்கள் கதறிய நினைவலைகள்,
நெஞ்சினில் நீங்காது நிற்க, 
எங்கள் நினைவுப்பெட்டகத்திலிருந்து 
உன் மாசற்ற சிரிப்பின் நிகழ்வுகள்,
இன்னும் எங்கள் உள்ளத்தில். 
ஆண்டொன்று போனால் 
வயதொன்று கூடும் என்றும் 
உன்னை விரைவில் காண்போம் 
என்ற எண்ணத்தில் வாழும் நாங்கள் . . .

நினைவாஞ்சலி - ஏப்ரல் 16, டாக்டர் ராஜ் கைலாஷ் மோகன்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !

முதல் நாள் பள்ளி,
அழுகையினூடே 
பையை அணைத்தேன் ,
நீரோ எம்மை அணைத்தீர்,
தாயுமானவராய் !

குறும்பு வயதின் உச்சமாய்  
ஓராயிரம் தண்டனைகள்,
வாயோயாது வைவீர்கள்
வலிக்கும் என அறிந்தும் திருத்த,
தந்தைக்கு நிகரானீர் !

என் நத்தை கூட்டிலிருந்து 
விடுவித்து வெளியுலகை காட்டினீர்.
தவறி விழுந்தால் 
தோளோடு அணைத்தீர்,
தோழனாய் திகழ்ந்தீர் !

தாய் தந்தது உயிர்
தந்தை தந்தது அன்பு
எனில் எமக்கு
நீர் தந்ததோ
உணர்ச்சி !

எதிர்பாரா சந்திப்பில் ,
நாங்கள் முன்னேறி
நல்ல குடிமகன்களாய் இருக்கையில்
எத்துணை மகிழ்ச்சி
எத்துணை குதூகலம் !

உங்களை வாழ்த்த வயதில்லை
உங்கள் அன்பிற்கு
தலை வணங்குகிறோம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! ! !


வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

நிலவை போல் நம் உறவு,
தேய்ந்தும் தோன்றியும், 
முழு இருட்டும் 
கடன்வாங்கிய வெளிச்சமுமாய்! 
குடும்பம் எனும் வானில்,
கண்கட்டி விளையாடும்
கடனாளி நிலவாய் . . ! 

பௌர்ணமி கவிதைகள்

என் கனவுகளில் தேய தொடங்கி
உன் முழு ஒளியில்
நான் கண் விழித்தேன்!
நீ என் பௌர்ணமி . . !

பௌர்ணமி கவிதைகள்

ப்ரகாசமாய் மிதந்தாலும்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
மத்தியில்,
கதியற்ற ஒற்றை நிலவாய்
கருநீல இருள் வானில்
தனி வெள்ளை தட்டாய்
சொல்லொன்னா சோகமேந்தி
பௌர்ணமி நிலவு . . !

பௌர்ணமிகவிதைகள்

நிலவும் தாயே
தான் தேய்ந்தாலும்
பேனாக்கள் வழி
பிரசவிக்கிராள் கவிதையாக . . !
நீ பௌர்ணமி

செவ்வாய், 21 மார்ச், 2017

பயணம்

விடியலை தேடி நகரும் பூமி ,
சுவாசத்தை தேடி அலையும் இலைகள்,
புற்கள் நிறைந்த வனங்கள் ,
இலையுதிர்ந்த மரங்கள் ,
பனி படர்ந்த புல்வெளிகள்,
மழை தாங்கிய கார்மேகங்கள் ,
வானும் பூமியும் வெண்மை படர,
அவ்வபோது பஞ்சவர்ணங்கள் தெறிக்க,
முடிவற்ற நீண்ட பாதையில் ,
சொற்களை தேடியும் ,
கனவுகளை சுமந்தும் ,
கவிதைகள் வடித்தும் ,
கேளிக்கையை சகித்தும் ,
பேனாக்காரியாய்
நீண்டதூர பயணம் . . .!

உலக கவிதைகள் தினம் படைப்பு - 2017

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்


நீயும் தமிழ் பெண்ணோ ?
நாணத்துடன் , 
தென்னங்கீற்றுக்களிடையே ஒளிந்திருந்து 
குளிர் பார்வையால் கண்களை நிரப்புகிறாயே ,
நீ பௌர்ணமி 

சனி, 11 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

பிள்ளைக்கு பசியுண்டு 
கரு நீள் வானை சூழ்ந்த 
பஞ்சு பொதி மெகங்களூடே 
அவள் காட்டிய பால்நிலவுண்டு…
நிலவின் மேனியில் திரையிடும்
அவள் முகம் மட்டும் வெகு தூரமாய்!
நீ பௌர்ணமி ...

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒருவேளை . . .

அழகாய் தான் தொடங்கியது
அந்த பயணம் ,
கனிவு பார்வைகளுக்கென
கண்கள் ஏங்கும் வரை.

ஒளிந்து கொண்டு தான் இருந்தன
இயலாமை என்றொரு உணர்வு ,
உரிமையை நிலைத்து கொள்ள
முடியாது போகும் வரை.

காணாமல் தான் இருந்தது ,
எதிர்த்து பேசும் குணம் ,
அநாகரீகமான கேள்விகளை
செவி கேட்காத வரை!

இத்துணைக்கு பிறகும் ,
வெட்கமில்லாமல் ஏங்கும்
மந்தை மனதை கண்டால்,
பொங்கி வழிகிறது வெறுமை!

மடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,
கண் வழி வரும் நீரை ,
துடைத்தெறிய ஒரு
விரலையாவது தேடுகையில்

உரைக்கிறது பல உண்மைகள்,
துள்ளி திரிந்த காலத்தில்
சேகரித்து வைத்திருக்கலாம்
ஒரு துளியையாவது . .

இத்துணை வெறுமையை ,
உண்ணு விழுங்க ,
இத்துணை தவறுகளை
மொத்தமாய் அழிக்க . . .

ஒரு வேளை இவையனைத்தும்
இல்லாது இருந்திருந்தால் ,
இல்லாமல் போன அவன்
நினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்!




திங்கள், 23 ஜனவரி, 2017

பெயரிடாவரிகள்

தூரமிருந்து நோக்கிய
பூந்தோட்டம் நெருங்க நெருங்க
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - தடை - போராட்டம் !

தமிழ் நாடு தழுவிய ஒரு போராட்டம் - வரலாறு காணாத ஒரு போராட்டம் . ஜல்லிக்கட்டை நான் ஆதரித்தாலும் , விஞான ரீதியில் சில வெளிச்சங்கள் . a 2 பால் இந்திய மாடுகள் போன்ற பெரிய பெரிய வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் புரிய சில அடிப்படை விஞ்ஞான உண்மைகள் இங்கே .

ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதனின் மரபணுக்கள் -  விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் பொருத்து தனித்தன்மைகள் உண்டு . மனிதர்களில் கூட , மனித ஜீனோம் திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகளில் ஒன்று , அனைத்து மனித இனத்தின் மரபணுக்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும் அதிக பக்ஷமாய் ஒரு சதவிகித வேறுபாடு மட்டுமே காணப்படும் என்றுபதும் தான் ! ஆம் , வெவ்வேறு வடிவங்கள் கொண்ட மனிதர்களின் மரபணுக்கள் சுமார் பூஜ்யம் முதல் அரிதாக ஒரு சதவிகிதம் தானாம் . 99.5% நமது மரபணுக்கள் ஒன்றாகவே இருக்கிறதாம்! விஞ்ஞான ரீதியில் பார்த்தல் , மாடு என்ற ஒற்றை சொல்லால் விளக்கபடும் அந்த உயிரினம் பலவகைகள் கொண்டவையாகவும் , ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதும் தான் உண்மை. 

மாடுகளின் இனம் பற்றிய தகவல்களில் நமக்கு தேவையான சில. 
நான்காயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்துஸ்தானத்தில் சிந்து நதி தீரத்திலும் , கங்கை கரை நிலங்களிலும் தற்போதைய கர்நாடகத்தின் பனஹள்ளி எனும் ஊரிலும் மாடுகளின் நடமாட்டங்கள் இருந்தன. அப்போது வசித்து வந்த மக்கள் , மாட்டினை வழிப்பட்டதாகவும் மாடுகளை வளர்க்க முயற்சித்ததையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

சங்க காலத்தில் , ஐந்து நிலங்களாய் இருந்த நம்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர-சோழ-பாண்டிய-கொங்கு மற்றும் நடு  நாடென்றும் ஆண்டு வந்தனர் . கறவை மாடுகளும் காளை மாடுகளும் நம் குடும்பத்துள் ஒருவராய் கருதப்பட்ட காலங்கள் அவை. தென் இந்திய மாடு வகைகளில் மேகரை மாடு ( இக்கால காங்கேய மாடு), கீக்கரை மாடு, செம்மரை மாடு ( மலையன் மாடு), பாலமலை மாடு , ஆலம்பாடி மாடு மற்றும் கொல்லி மலை மாடினங்கள் இருந்து வந்தன . மாட்டின் மடி பார்த்து பால் கறக்க பட்ட காலம் . கன்றுகள் கொஞ்சி விளையாடிப்பின் பால் கறக்க பட்ட காலம். விரல் பட்டால் நோகுமே என்று விரலுக்கும் காம்பிற்கும் எண்ணெய் தடவி பால் கறந்த காலம். 

காளை மாடுகளை ஏர் உழுவதற்கு , வண்டி பூட்டுவதற்குமாய் பயன் படுத்தினர். சங்க இலக்கியங்களில் , காளைகளை தழுவுவதன் மூலம் வீரத்தினை பறைசாற்றி , திருமணங்களும் நடத்தி வைக்க பட்டன. தாம் வளர்த்த காளைகளிடம் தோற்பதையும் பெருமையாய் கருதினர்!

சில இனங்கள் கறவைக்காகவும் சில இனங்கள் காளையின் வேலைக்காகவும் மூன்றாம் வகை மாடுகள் வறட்சியிலும் நீடித்து நிற்கும் தன்மைக்காகவும் வளர்க்கப்பட்டன. அதாவது கறவை மாட்டின் காளை இனமும் , உழைக்கும் காளைகளின் கறவை தகுதியையும் புரிந்த மக்கள் அதற்கேற்றாற் போல மாடுகளை பயன்படுத்தினர். சங்க காலத்தில் திகழ்ந்த இனம் தமிழினம் , திகழ்ந்த மக்கள் இந்துக்கள்! ஆக , தமிழினத்தின் விளையாட்டுகளில் ஏர் தழுவுதலும் நமது அடையாளம்.

பாரதம் சிந்து நாடாகி இந்துஸ்தானமாக மாறி இந்தியாவென விளிக்க தொடங்கிய காலகட்டத்தில் , நம் நாட்டிற்கான மாடுகள் - உள்நாட்டு இனங்கள் சுமார் 40 இருந்தன . காங்கேய மாடுகளும் பனஹள்ளி மாடுகளும் எப்படியோ நீடித்து வந்தன . 

நம் மாடுகளின் சிறப்புக்கள் என்ன ? சில மாடினத்தில் மாடுகளின் தோல் மிகவும் தடிமன்னாக இருக்கும். பூச்சி கடி , வறட்சி வெயில் இப்படி பல இயற்கை அபாயங்களில் தன்னை தானே காத்துக்கொள்ளும். அவற்றின் தோலில் சுரக்கும் ஒரு சில நொதிகள் கிருமி நாசினியாகவும் செயல் படுகின்றன. மற்றபடி , மாட்டின் சாணம் கோமியம் ஒவ்வொன்றிற்கும் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கே தெரியும். 

பால் பற்றி பார்த்தோமெனில் , பாலில் சில புரத சத்துக்கள் இருக்கின்றன. எப்படி கொழுப்பு சத்தில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளதோ அதே போல் , புரத சத்துக்களும் நல்லவை தீயவை என உண்டு. பால் புரத்தில் முதன்மையான புரதம் கேசின். இது இருவகை படும் . A 1 மற்றும் A2 கேசின். A2 கேசின் உடலிற்கு மிக நல்லதென்றும் , A1 கேசின் தொடர்ந்து உட்கொண்டால் பிளேக்ஸ் எனும் வாத கொள்ளை நோய் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்றும் ஆராய்ச்சிகள் உள்ளன. (இதை பார்க்க . .  https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12957678).

இந்திய உள்நாட்டு இனத்தின் பாலில் A2 கேசின் நிறைய உள்ளதென்றும் , உள்நாட்டு கறவை மாடுகளை உள்நாட்டு காளைகளோடு இனப்பெருக்கம் செய்து அந்த இனத்தை பாதுகாப்பதன் மூலம் , பாலின் தரம் குறையாது . கலப்பட இன பெருக்கம் செய்வதன் மூலம் , கறவை அளவை மிகுதி படுத்தலாமே ஒழிய இந்த A2 புரத சத்தை பாலில் கொண்டு வர இயலாது. அது புரதத்தின் தன்மை. 

வளர்ந்த நமது விவசாய முறையால் , காளைகளுக்கு வேலை இல்லாமற் போனாலும் ஜல்லிக்கட்டு எனும் நமது பாரம்பரிய விளையாட்டிற்காகவே வளர்க்க பட்ட காளைகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டன.  அதன்மூலம் நமது உள்நாட்டு இனங்களின் அழிவு கொஞ்சம் தாமதமாகிக்கொண்டு இருந்தன. 

இப்பொழுது , ஜல்லிக்கட்டை தடை விதித்து நாம் போராட்ட களத்தில் இறங்கினாலும் நம்மில் பலருக்கு எதற்காக போராட்டம், யாருக்காக போராட்டம் , யாரை எதிர்த்து போராட்டம் என்றே புரியாமல் திணறுகின்றோம் . அரசியல்வாதிகளை எதிர்த்தா ? விவாசத்தை ஊக்குவிக்கவா? தமிழ் மரபை காப்பாற்றவா ? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவா? உள்நாட்டு சதி கும்பலை அம்பாலா படுத்தவா ? யாரை எதிர்க்கவேண்டும் என்றே தெரியாமல் , எதை காப்பாற்ற வேண்டும் என்றே புரியாமல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாய் போராடிக்கொண்டு இருக்கிறோம்!  இதில் வேதனைக்குரிய விடயம், நம்மில் சிலர் கலப்பட காளையினத்தை படமாக வைத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிப்பது தான்!

ஏற்கணமே மஞ்சள் வேப்பம் கற்றாழை என்று நமது தாவரங்களை இழந்தாயிற்று. இன்னும் , ஆடமாடுகளையும் இழந்து விட்டு - "வல்லரசு இந்தியா" என்று கனவு காண்பதன் அர்த்தம் என்ன ? 

யோசிப்போம் - களமிறங்கிய நாம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்டறிவோம் - சரியான திசையில் போராட்டத்தை கொண்டு செல்வோம் ! 

பின்குறிப்பு : இதை எழுதுவதற்கு முன்பு சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து விட்டே எழுதி இருக்கிறேன். அவற்றில் ஒன்றை குறிப்பிடவும் செய்துள்ளேன்!

புதன், 18 ஜனவரி, 2017

தடை அதை உடை

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணக்கங்கள்!

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
தமிழ்நாட்டு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!

காளைகளுக்காக 
களம் இறங்கிய 
எங்குல சிங்கங்களுக்கு 
கை கூப்பிய வணக்கங்கள் !

இனிக்க இனிக்க பொங்கலிட்டு 
இல்லங்களில் இட்ட பொங்கலை 
நம் உணர்வுகளோடு பங்கிட்டு 
குடும்பத்துள் ஒருத்தனாய் 
கருதும் காளைகளுக்காக 
கூட்டமாய் கூடியிருக்கும் 
வீரர்களுக்கு..!

பாஞ்சு வரும் காளைகளை,
நெஞ்சில் தாங்கி 
கடலோரமாய் குவிந்த 
கன்றுகளை 
கயவர்கள் கூட்டம் 
கொடுந்திறையிட்டு 
அடக்க தொடங்கும் தருணத்தில் ,
வாழ்த்துப்பாக்களுக்கு 
இடமில்லையென்றாலும் 

எச்சரிக்கைப்பாக்கள் தொடுக்கிறோம்  ,
காண்பிக்காதீர்கள்  வீரத்தை,
கட்டுக்கடங்காது நிற்கும் 
எங்குல கன்றும்  காளைகளும் 
அறப்போர் நிறுத்தி ,
தீஜ்வாலை உமிழ்வார்கள் . . !

நியூயார்க்கில் நான் . . ! - 4

அழைப்பு இணைக்கப்பட்டதும் கத்தியது நான் தான். பதறிப் போய் அம்மாவும் மாமியும் உள்ளே ஓடி வர, நான் , " அந்த பக்கம், நீங்க பார்த்த பையன் அவர் அம்மாவோட இருக்காரு. நான் தனியா பேசறது, எனக்கும் ரெண்டு பெரு துணைக்கு நில்லுங்கோ" என்றேனே, இருவருக்கும் கோபம் தலைக்கு ஏறியது, முகம் காமிக்க முடியாதே. ஏனென்றால் அந்த பக்கம், நேரலை வேறு. அதனால் வேறு வழியேதும் இல்லாமல், unmute போட்டு பேச தொடங்கிவிட்டோம். சிறிது குசலம் விசாரணை. பின்பு நாங்கள் இருவரும் ஒரு இருபது நிமிட சம்பாஷணை ( இங்கு தான் நான் தலைவருக்கு எச்சரிக்கை தந்தது, என் குறும்பும் அமைதியின்மையை பற்றியும்) . அடுத்த இரு நாட்களில் , தலைவர் திருமணத்திற்கு சரி சொல்ல, எனக்கோ ஒரே ஆச்சரியம் தாளலை. என் பெற்றோர்களுக்கோ , சந்தோசம் சொல்லி மாளலை. அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்குள், நிச்சிய புடவைகள், நகை, மண்டபம், இப்படி எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. இதில் மிக வியப்பான விஷயம், நான் தலைவரிடம் பேச தொடங்காதது தான் . இதுல வேற நிச்சியதார்த்தத்துல நடந்தது, இன்னும் பெரும் சிரிப்பு. 
முழுதாய் இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் . இடையில் நாங்கள் அவ்வளவாக கதைத்துக்கொள்ளவில்லை. நிச்சிய மேடையில் நான் மட்டும் நிற்கிறேன். "மாப்பிளை" காணோம். அவர், அமெரிக்காவில் இருந்து கொண்டு பங்கு கொள்கிறார். இந்த சாஸ்திரங்களும் வழக்கங்களும், பெரியவர்களின் அலும்பும் , அப்பப்பா... 
எனக்கு ஒரு ஒன்றேகால் அடி முடி உண்டு. வெறும் அதில் பின்னி கொஞ்சம் பூ வைத்து இருக்க வேண்டியது தானே.. அதற்கு கொஞ்சம் சவுரி சேர்த்தார்கள். அலங்கார பெண்மணிக்கு சரியாக சவுரி வைத்து பின்ன தெரியவில்லை. அவசரமாய் எதோ என் தலையில் காமெடி செய்துவிட்டு ஓடி போயிட்டாள் .
பூ பத்தவில்லை என்று சுமார் 20 முழம் பூ , நிச்சியம் ஆரமித்து உடன் என் மாமிகள் தலையில் சுத்த தொடங்கினார்கள். மேடையில் திடீரென என்னை கூப்பிட்டு இரண்டு மாலை போட்டார்கள். ( "மாப்பிளை"யின் மாலையோடு எனதுமாம் ). உடலில் கணம் கூடியது. இரண்டு முறை நமஸ்காரங்கள் வேறு. இதுவரை நான் நேரிலே பார்க்காத அந்த மாப்பிள்ளைக்கு ! சடங்குகள் செய்து வைத்த என் பெரியப்பா , ஒவ்வொரு முறையும் என்னை "சபைக்கு நமஸ்காரம் செய் மா குழந்தை" என்று பயந்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தார். பின்னே, என் அராஜகம் அவருக்கு நன்றாக தெரியுமே! எங்கே அவரையும் நான் தாளித்து விடுவேனோ என்ற பயம். 
இதற்கு இடையில், எங்க தலைவர், ஒய்யாரமாய் , நேரலையில் வந்து மண்டபத்தில் உள்ள அனைவருக்கும் தரிசனம் தந்து இருக்கிறார் , எனக்கு மட்டும் இல்லை! முகூர்த்த பட்டு ஓதி வைத்த  உடன், இடம் வலம் பார்த்தேன், யாரும் தென்படவில்லை உதவிக்கு வர, நான் பாட்டுக்கு போய் புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்துவிட்டேன் துள்ளிக்கொண்டே . அங்கு இருந்த வாண்டுகள், என் புடவையை இழுத்து, "சித்தி நீ இவ்வ்ளோ சீக்ரம் கட்டிண்டுவந்துட்டே?" என்று ஆச்சரிய பட, பீதியில் என் அக்காவும் அண்ணியும் என்னை பிடித்து மெதுவாய் நடக்க வைத்து, மேடைக்கு அழைத்தனர். 
கடைசியாய், நாத்தனார் முடித்தல் என்று, என் மடியில், மட்டையுரிக்காத தேங்காயுடன் சில பல சாமான்களையும் சேர்த்து கட்டிவிட, பின்னுக்கு பின்னல் இழுக்க, முன்னுக்கு மட்டைத்தேங்காய் இழுக்க, சரக்கடிக்க போதைப்பெண் போல் தள்ளாடிக்கொண்டே நமஸ்காரங்கள் முடிந்தது, என் பெரியப்பவை முறைத்து கொண்டே, "மாப்பிள்ளை" யை திட்டி கொண்டே . .
சுமுகமாய் முடிந்த நிச்சியதார்தம் கடைசியில், மாப்பிள்ளையின் மாமா, தன தொலைபேசியை என்னிடம் தந்து,"உன் வருங்கால கணவர் திரையில் இருக்கிறான் பேசிக்கொள் " என்றவுடன், எனக்கு வந்தது முதல் பயம் . "ஐயோ, இவருக்கா என்னை நிச்சியம் செய்தார்கள் " பயபீதியில் வெளிறியது என் முகம் . . 

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

இன்று முதல் அவள் தேய தொடங்கினும்,
பட்டொளி வீசி என் இரவுகளை விடியலில் தள்ளுவாள்!
அவள் போராடா காரிருள் மேகமில்லை,
அவள் ராஜ்ஜியத்தில் வானமே எல்லை!

சனி, 31 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 3

ஆம். என் வாயிலிருந்து தான் அந்த கேள்வி. "யாரு அந்த யோகேஷ்" குட்டி பையனோட விளையாடிண்டு இருந்ததுல , மறந்து போச்சு. யோகேஷ் என்கிற யோகி யாக்கப்பட்ட அந்த முகம் தெரியாத இளைஞன் தான் வரன் என்று. அப்புறம், அம்மாவும் மாமியும் நினைவு படுத்தினார்கள் . 
மறுபடியும் என்னிடமே வந்தது மற்றொரு கேள்வி. "என்ன எதிர்பார்கிறாய்". எனக்கு அதுக்கு மேல் இருப்பு இல்லை, " ஆத்துக்காரர் வேலைக்கு ஆள் எடுக்கலை நான். நிம்மதியா வாழனும். ரெண்டு பேரோட அப்பா அம்மாவையும் ஒரு மாதிரி தான் பார்ப்பேன். எங்க அப்பா அம்மா ஒசத்தி, எனக்கு வரப்போறவரோட அப்பா அம்மா தாழ்த்தி அதெல்லாம் இல்லை. எனக்கு கூட்டு குடும்பத்தில், ஜாலியா சந்தோஷமா ஒண்ணா இருக்கணும். அவ்வ்ளோதாங்க , என்ன பொருத்த வரைக்கும் கல்யாணம்னா " பளிச்.. பேசி முடிச்சாச்சு. அப்பாவின் பயம் கண் வழியே வழிந்தோடியது . "இவ வாய் இருக்கே " அம்மாவின் குரல் மாமியின் காதில் மெதுவாய் விழுந்தது . "மாப்பிளை வீட்டார்" கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு கிளம்பிவிட்டனர். ( நான் பயம் ஏதும் இல்லாமல் வெளியே சென்று டாடா காமிச்சு வழியெல்லாம் அனுப்பிவெச்சேன்.) ஏனோ , அந்த குடும்பமே பார்க்க அழகாய் இருந்தது. தங்கை மகனிற்காக , தன மாப்பிளை சொல் கேட்டு, பெண் பார்க்க வந்த அண்ணன் , மச்சினர் சொன்னால் சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் தங்கையின் கணவர், தனது தோழனாய் இருக்கும், கணவனின் தம்பிக்காக வந்த அண்ணியார் . அழகாய் தெரிந்தது, எனக்கு. (இந்த உறவுமுறைகள் எனக்கு தாமதமாய் புரிந்தது. அன்றென்னவோ, ஒருவருக்காக இன்னொருவர் வருகிறார்கள். எவ்வளவு அன்னோன்னியம் என்று தான் தோன்றியது.)
நான் என்ன சொல்ல போறேன் என்று மடியில் நெருப்பை காட்டியவாறு நின்ற அம்மாவின் முன், அப்பாவை கட்டிக்கொண்டு, 
"எனக்கு இந்த குடும்பம் பிடித்திருக்கு. பையனுக்கு சரினா எனக்கு ஒகே . " அப்படின்னு முடிச்சேன். இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சு காற்றை அம்மாவும் அப்பாவும், "அப்பாடா" என்று விட்டார்கள் . 
" எல்லாம் சரி, இதுல யாரு யாரெல்லாம்? பையனும் வந்திருந்தானா என்ன?" இப்படி எல்லாம் கேள்வி கேட்டது நானே தான் . 
இப்பொழுது தான் அம்மா, எல்லா உறவு முறையையும், பையனின் புகைப்படத்தையும் (ஒரு வழியாக - ஒண்ணே ஒண்ணு தான்) மறக்காமல், பையனின் பெயரையும் கூறினாள் ! 
எதையோ வென்று விட்ட களைப்பில் அம்மா அப்பா.. நமக்கு இன்னும் வேலை ஆகவில்லையே. ஆம், பெண் பிள்ளையாய் ஒழுங்காய் நடந்துகொண்டால் இனிப்பு வாங்கித்தருவதாய் செய்த சத்தியத்தை அம்மா மறந்து விட்டாள். விடுவேனா நான் ? " அம்மா சாக்கி..." தொடங்கினேன் . என் அடவாதத்தை துளிகூட சட்டை செய்யாமலே யாரோடோ பேசிக்கொண்டு இருந்தாள் . பின்பு, "மாப்பிளை வீட்டார்" பற்றிய தகவல்களை சொன்னாள் . எனக்கு அப்போது, நாடகம் முடிந்ததும் மேடை இறங்கியவுடன் , இன்னாரை வந்தவர் இவர் என்று வாசிப்பார்களே அது போன்று இருந்தது. ( என்னங்க பண்றது . அம்மா, இலக்கியவாதி . பள்ளிக்காலத்தில், எல்லா மேடை நாடகங்களையும் இவர் தான் இயற்றுவார் ).நானும் , அப்பாவின் நண்பர் யார் என்று அடையாளம் கண்டு கொண்டேன், அம்மாவின் நீண்ட காலக்ஷேப உரையின் முடிவில்.
அன்றைய தினம் மாலை , "பையன் " வீடியோ சாட்டில் வருவதாய் பேச்சு. நிறைய வசவுகள் . நிறைய புத்திமதிகள் . ( அட, நான் தான் முன்பே சொன்னேனே , என் குறும்பும் சேட்டையும் பற்றி) அடேயப்பா. 
"யாய் , மாப்பிளை பையா , உனக்கு இந்த மாதிரி எல்லாம் உண்டோ ?" அப்படின்னு டெலிபதி முயன்றுகொண்டு இருந்தேன். 

வீடியோ சாட் தொடங்கியதும் , mute போட்டுவிட்டு நான் அலறினேன் . " அம்மா , அப்பா , மாமீ  . . .! "

தொடர்ந்து எழுதுவேன் ...

சனி, 24 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 2

சரி , கடைளில் தான் இப்படி என்றால், பேருந்துகளிலும் இதே கதை தான்,, பேருந்தில் இருந்து இறங்கி பின் ஓட்டுனருக்கு  டாடா சொல்வதும் இயல்பான ஒன்று தான் ! இப்படியாக வெளியுலகத்தை விசித்திரமாய் நான் பார்க்க, என்னை பெற்றவர்கள் என்னை விசித்திரமாய் பார்க்க தொடங்கினார்கள். 
அட ஆமாம். முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் இல்லையா? நான் சரியான குறும்புக்காரி. அறந்த வால் அப்படின்னும், குட்டி பிசாசு அப்படின்னும் பட்ட பேரு / செல்ல பேரு எல்லாம் உண்டு. அப்படி பட்ட எனக்கு ஒரு அமைதியான சமத்தானா ஆத்துக்காரர். ( இந்தா, நாங்க எல்லாம் நேர்மையானவங்க . பரிசம் போடும் போதே, எனக்கு அமைதினா என்னான்னே தெரியாது அப்படின்னு எச்சரிக்கை தந்துபுட்டோம்!) .
எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க என் அப்பா அம்மா பட்ட பாடு! நான் எழுதறதெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான். பயோடெக்னாலஜி - உயிரி தொழில்நுட்ப அறிவியல் அப்படிங்கிற பட்டப்படிப்பை 6 வருஷம் படிச்சு முடிச்சு, படிக்கும்போதெல்லாம், ஆறு மணி பேருந்துக்கு அஞ்சரைக்கு அம்மாக்கிட்ட ஏத்து வாங்கிண்டே எழுந்து, அப்பாகிட்ட பேச்சு வாங்கிண்டே வண்டியிலே கூட்டிண்டு போக சொல்லி, ராத்திரி ஏழு மணி வரைக்கும் ஆராய்ச்சியில் மூழ்கி, பேராசிரியர்களிடம் "பெண் பிள்ளை அம்மா நீ. நேரம் காலமா வீடு போய் சேரு " அப்படின்னு புத்தி சொல் கேட்டுகிட்டு, எங்க அம்மா ஆயுசை அறையாயுசாய் குறைச்சு , பாத ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு, கேம்ஸ் விளையாடிட்டு, போர்வையை இழுத்து போர்த்திக்கிட்டு உருண்டேன்னா அடுத்த நாள் காலையில அதே கதை. இது தினசரி நடவடிக்கை. பரிக்ஷை சமயத்தில், ஒரு நாள் முன்னாடி, கல்லூரி நூலகத்தை ரெய்டு விட்டு, அடுத்த நாள் பாட புஸ்த்தகத்தை பொறுக்கி எடுத்து, வீடு வந்து , எனக்கு பிடித்த பாடங்களை மட்டும், "ஆழமாய்" படித்து, பகலில் போய் பரிக்ஷை எழுதிவிட்டு, நன்பகல் வீடு வந்து, சமைத்து வைத்ததை ( நான் இல்லைங்கோ , என் அம்மாவோ, தம்பியோ சமைச்சு வெச்சு இருப்பாங்க) நல்லா மொசுக்கிவிட்டு தூக்கம். அன்றிரவு வீட்டில் அனைவரும் தூங்க போகும் போது என்னை எழுப்பி விடுவார்கள். அவர்கள் தூங்கியபின்பு நான் படிக்க ஆரமித்தால் விடியும் பொழுது அவர்களை எழுப்பி விட்டு, நான் உறங்க போவேன். கல்லூரி காலம் இப்படியாக, வேலைக்கு போன காலம், கொஞ்சமே கொஞ்சம் மாறுதலோடு . ஆறு மணி பேருந்துக்கு எழும்பாமல், 8.10 ரயிலிற்கு 7.45க்கு எழுந்துப்பேன் . முன்னிரவு வைத்த உப்புமா / காய் / கஞ்சி எதோ ஒன்னு சாப்பிட கையில் எடுத்துக்கொண்டு, குடு குடு ன்னு ஓடறது தான் பொழப்பு! தனியாக தங்கி இருந்ததால், என் அறையை நானே சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வாரம் ஒருமுறை அந்த இன்னல். (நல்லவேளை, வீட்டோடு ஒரு பாட்டி இருந்தார்கள். எனக்கு உதவிக்கு!)
இப்படியாகப்பட்ட எனக்கு, இந்த பொண்ணு பார்க்கும் படலம், பாட்டு படறது," வாங்க பழகலாம்" ன்னு வழிஞ்சுட்டு அப்பறம் , "பொண்ணு ரொம்ப போல்டு டைப். வெளிப்படையா பேசறா. எனக்கு பிடிக்கலை" அப்படின்னு பிட்டு போட்டு எஸ்கேப் ஆகிறது எல்லாம் சுத்தமா ஆகாத காரியம். அதனால, என் தலைல கல்யாண "சுமை" ( அப்போ அப்புடி நெனச்சுப்புட்டேனுங்கோ) ஏத்தி வைக்க இருந்த அப்பா அம்மா கிட்ட, " நல்ல குடும்பம் - கூட்டு குடும்பம் னா டபுள் ஓகே. மத்தபடி உங்களுக்கு ஓகே னா , எனக்கு ஓகே. இந்த மீட்டிங்,டேட்டிங், அவுட்டிங், இதெல்லாம் நான் பண்ண மாட்டேன். பொண்ணு பாக்க வந்து இன்டர்வ்யூ பண்ணினா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் " அப்படின்னு பற்பல விதிமுறைகளை விளக்கி , வரன் தேட சம்மதம் கொடுத்தேன்.
அறிந்தவர்கள், அங்காளி பங்காளி அப்படி இப்படின்னு , ஒரு வரன் வந்திருக்கு அப்பா அம்மாக்கு. கூட்டு குடும்பம் - டிக். நல்ல மனிதர்கள் - டிக் . அப்படி அவர்களே டிக் போட்டுகொண்டு, ஒரு சந்திப்பு தினத்தை முடிவு செய்திருக்கிறார்கள். ஞாயிறு காலை, "மாப்பிள்ளை வீட்டார்" வருவதாக, சனிக்கிழமை அம்மா தகவல் தருகிறார்கள். வந்ததே கோபம் . நான் போராளி ஆகிவிட்டேன். எத்துணை சொல்லியும், பெண் பார்க்கும் படலாமா?
குடும்ப நண்பர், அண்டை வீட்டாரின் சொந்தம் என்றெல்லாம் அப்பா சமாதானப்படுத்த தொடங்கினார். "நான் பொம்மை போல் புடவை கட்டி முன்னாடி நிற்க மாட்டேன்" ( எனக்கு சும்மா புடவை கட்டிக்கொள்வது என்றாலே வெகு பிரியம். அனால், அந்த படலத்தை எதிர்க்கும் பொழுது, புடவையா என்று வீம்பு!). நண்பரின் தகவல் படி, ஒரு சிறு குழந்தையும் உடன் வருவதாய் தகவல். அம்மாவும் மாமியும் அந்த பிள்ளைக்கு "பொம்மையும் சாக்கலேட்டும் " வாங்கி வைத்தனர் . " எனக்கு சாக்கி ?" என்றபடி நான் கேட்க, "புடவை கட்டி கொஞ்சம் அமைதியாய் இருக்க முயற்சி பண்ணினால் உண்டு " என்ற பதில் வந்தது. சரி, "சாக்கி " கிடைக்குமே, என்று கொஞ்சமே கொஞ்சம் குறும்புத்தனத்தை ஒளித்து வைக்க முயற்சி பண்ணி கொண்டிருந்தேன்.
"மாப்பிளை வீட்டார்" வந்தனர், கூடவே , அந்த குழந்தையும். ரஸகுல்லா மாதிரி ஒரு குழந்தை. அவனையே நான் பிச்சு பிச்சு சாப்பிட எண்ணி கொண்டு இருந்தேன். அவன் கையில், "dairy Milk Silk " வேறு. ஜாலியாக , போய் ஊஞ்சலில் அவர்கள் முன் உக்காந்து கொண்டு ஊஞ்சல் ஆடிய வண்ணம், குட்டி பையனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்.
படிப்பு,பட்டமளிப்பு, வேலை இப்படி பல தருணங்களில் எனக்காக பயப்படாத அப்பா அம்மா, அன்று அரண்டு கொண்டு இருந்தார்கள். குட்டி பையனை கவனித்து கொண்டு இருந்த எனக்கு, பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தது கருத்தில் பதியவில்லை.
"நீ என்னம்மா படித்து இருக்கிறாய்?" மாப்பிளை வீட்டாரின் கேள்வி . அது கூட நான் கவனிக்கவில்லை . அப்பா பதில் சொன்னார் போலும்.
மீண்டும், " யோகேஷ் படிச்சாப்பல அதே படிப்பா?" இம்முறை மாமி என்னை உசுப்பி விட , நான் சுதாரித்தேன். என்ன பேசுகிறார்கள் இவர்கள்? நான் முழிக்க, கூடவே ஒரு கேள்வி . "யார் யோகேஷ்?" என்றேன் ....

தொடர்ந்து எழுதுவேன் . . .