செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒருவேளை . . .

அழகாய் தான் தொடங்கியது
அந்த பயணம் ,
கனிவு பார்வைகளுக்கென
கண்கள் ஏங்கும் வரை.

ஒளிந்து கொண்டு தான் இருந்தன
இயலாமை என்றொரு உணர்வு ,
உரிமையை நிலைத்து கொள்ள
முடியாது போகும் வரை.

காணாமல் தான் இருந்தது ,
எதிர்த்து பேசும் குணம் ,
அநாகரீகமான கேள்விகளை
செவி கேட்காத வரை!

இத்துணைக்கு பிறகும் ,
வெட்கமில்லாமல் ஏங்கும்
மந்தை மனதை கண்டால்,
பொங்கி வழிகிறது வெறுமை!

மடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,
கண் வழி வரும் நீரை ,
துடைத்தெறிய ஒரு
விரலையாவது தேடுகையில்

உரைக்கிறது பல உண்மைகள்,
துள்ளி திரிந்த காலத்தில்
சேகரித்து வைத்திருக்கலாம்
ஒரு துளியையாவது . .

இத்துணை வெறுமையை ,
உண்ணு விழுங்க ,
இத்துணை தவறுகளை
மொத்தமாய் அழிக்க . . .

ஒரு வேளை இவையனைத்தும்
இல்லாது இருந்திருந்தால் ,
இல்லாமல் போன அவன்
நினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்!




திங்கள், 23 ஜனவரி, 2017

பெயரிடாவரிகள்

தூரமிருந்து நோக்கிய
பூந்தோட்டம் நெருங்க நெருங்க
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - தடை - போராட்டம் !

தமிழ் நாடு தழுவிய ஒரு போராட்டம் - வரலாறு காணாத ஒரு போராட்டம் . ஜல்லிக்கட்டை நான் ஆதரித்தாலும் , விஞான ரீதியில் சில வெளிச்சங்கள் . a 2 பால் இந்திய மாடுகள் போன்ற பெரிய பெரிய வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் புரிய சில அடிப்படை விஞ்ஞான உண்மைகள் இங்கே .

ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதனின் மரபணுக்கள் -  விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் பொருத்து தனித்தன்மைகள் உண்டு . மனிதர்களில் கூட , மனித ஜீனோம் திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகளில் ஒன்று , அனைத்து மனித இனத்தின் மரபணுக்கள் ஒரே மாதிரி இருக்கும் என்றும் அதிக பக்ஷமாய் ஒரு சதவிகித வேறுபாடு மட்டுமே காணப்படும் என்றுபதும் தான் ! ஆம் , வெவ்வேறு வடிவங்கள் கொண்ட மனிதர்களின் மரபணுக்கள் சுமார் பூஜ்யம் முதல் அரிதாக ஒரு சதவிகிதம் தானாம் . 99.5% நமது மரபணுக்கள் ஒன்றாகவே இருக்கிறதாம்! விஞ்ஞான ரீதியில் பார்த்தல் , மாடு என்ற ஒற்றை சொல்லால் விளக்கபடும் அந்த உயிரினம் பலவகைகள் கொண்டவையாகவும் , ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பதும் தான் உண்மை. 

மாடுகளின் இனம் பற்றிய தகவல்களில் நமக்கு தேவையான சில. 
நான்காயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்துஸ்தானத்தில் சிந்து நதி தீரத்திலும் , கங்கை கரை நிலங்களிலும் தற்போதைய கர்நாடகத்தின் பனஹள்ளி எனும் ஊரிலும் மாடுகளின் நடமாட்டங்கள் இருந்தன. அப்போது வசித்து வந்த மக்கள் , மாட்டினை வழிப்பட்டதாகவும் மாடுகளை வளர்க்க முயற்சித்ததையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

சங்க காலத்தில் , ஐந்து நிலங்களாய் இருந்த நம்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் சேர-சோழ-பாண்டிய-கொங்கு மற்றும் நடு  நாடென்றும் ஆண்டு வந்தனர் . கறவை மாடுகளும் காளை மாடுகளும் நம் குடும்பத்துள் ஒருவராய் கருதப்பட்ட காலங்கள் அவை. தென் இந்திய மாடு வகைகளில் மேகரை மாடு ( இக்கால காங்கேய மாடு), கீக்கரை மாடு, செம்மரை மாடு ( மலையன் மாடு), பாலமலை மாடு , ஆலம்பாடி மாடு மற்றும் கொல்லி மலை மாடினங்கள் இருந்து வந்தன . மாட்டின் மடி பார்த்து பால் கறக்க பட்ட காலம் . கன்றுகள் கொஞ்சி விளையாடிப்பின் பால் கறக்க பட்ட காலம். விரல் பட்டால் நோகுமே என்று விரலுக்கும் காம்பிற்கும் எண்ணெய் தடவி பால் கறந்த காலம். 

காளை மாடுகளை ஏர் உழுவதற்கு , வண்டி பூட்டுவதற்குமாய் பயன் படுத்தினர். சங்க இலக்கியங்களில் , காளைகளை தழுவுவதன் மூலம் வீரத்தினை பறைசாற்றி , திருமணங்களும் நடத்தி வைக்க பட்டன. தாம் வளர்த்த காளைகளிடம் தோற்பதையும் பெருமையாய் கருதினர்!

சில இனங்கள் கறவைக்காகவும் சில இனங்கள் காளையின் வேலைக்காகவும் மூன்றாம் வகை மாடுகள் வறட்சியிலும் நீடித்து நிற்கும் தன்மைக்காகவும் வளர்க்கப்பட்டன. அதாவது கறவை மாட்டின் காளை இனமும் , உழைக்கும் காளைகளின் கறவை தகுதியையும் புரிந்த மக்கள் அதற்கேற்றாற் போல மாடுகளை பயன்படுத்தினர். சங்க காலத்தில் திகழ்ந்த இனம் தமிழினம் , திகழ்ந்த மக்கள் இந்துக்கள்! ஆக , தமிழினத்தின் விளையாட்டுகளில் ஏர் தழுவுதலும் நமது அடையாளம்.

பாரதம் சிந்து நாடாகி இந்துஸ்தானமாக மாறி இந்தியாவென விளிக்க தொடங்கிய காலகட்டத்தில் , நம் நாட்டிற்கான மாடுகள் - உள்நாட்டு இனங்கள் சுமார் 40 இருந்தன . காங்கேய மாடுகளும் பனஹள்ளி மாடுகளும் எப்படியோ நீடித்து வந்தன . 

நம் மாடுகளின் சிறப்புக்கள் என்ன ? சில மாடினத்தில் மாடுகளின் தோல் மிகவும் தடிமன்னாக இருக்கும். பூச்சி கடி , வறட்சி வெயில் இப்படி பல இயற்கை அபாயங்களில் தன்னை தானே காத்துக்கொள்ளும். அவற்றின் தோலில் சுரக்கும் ஒரு சில நொதிகள் கிருமி நாசினியாகவும் செயல் படுகின்றன. மற்றபடி , மாட்டின் சாணம் கோமியம் ஒவ்வொன்றிற்கும் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கே தெரியும். 

பால் பற்றி பார்த்தோமெனில் , பாலில் சில புரத சத்துக்கள் இருக்கின்றன. எப்படி கொழுப்பு சத்தில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளதோ அதே போல் , புரத சத்துக்களும் நல்லவை தீயவை என உண்டு. பால் புரத்தில் முதன்மையான புரதம் கேசின். இது இருவகை படும் . A 1 மற்றும் A2 கேசின். A2 கேசின் உடலிற்கு மிக நல்லதென்றும் , A1 கேசின் தொடர்ந்து உட்கொண்டால் பிளேக்ஸ் எனும் வாத கொள்ளை நோய் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்றும் ஆராய்ச்சிகள் உள்ளன. (இதை பார்க்க . .  https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12957678).

இந்திய உள்நாட்டு இனத்தின் பாலில் A2 கேசின் நிறைய உள்ளதென்றும் , உள்நாட்டு கறவை மாடுகளை உள்நாட்டு காளைகளோடு இனப்பெருக்கம் செய்து அந்த இனத்தை பாதுகாப்பதன் மூலம் , பாலின் தரம் குறையாது . கலப்பட இன பெருக்கம் செய்வதன் மூலம் , கறவை அளவை மிகுதி படுத்தலாமே ஒழிய இந்த A2 புரத சத்தை பாலில் கொண்டு வர இயலாது. அது புரதத்தின் தன்மை. 

வளர்ந்த நமது விவசாய முறையால் , காளைகளுக்கு வேலை இல்லாமற் போனாலும் ஜல்லிக்கட்டு எனும் நமது பாரம்பரிய விளையாட்டிற்காகவே வளர்க்க பட்ட காளைகள் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டன.  அதன்மூலம் நமது உள்நாட்டு இனங்களின் அழிவு கொஞ்சம் தாமதமாகிக்கொண்டு இருந்தன. 

இப்பொழுது , ஜல்லிக்கட்டை தடை விதித்து நாம் போராட்ட களத்தில் இறங்கினாலும் நம்மில் பலருக்கு எதற்காக போராட்டம், யாருக்காக போராட்டம் , யாரை எதிர்த்து போராட்டம் என்றே புரியாமல் திணறுகின்றோம் . அரசியல்வாதிகளை எதிர்த்தா ? விவாசத்தை ஊக்குவிக்கவா? தமிழ் மரபை காப்பாற்றவா ? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவா? உள்நாட்டு சதி கும்பலை அம்பாலா படுத்தவா ? யாரை எதிர்க்கவேண்டும் என்றே தெரியாமல் , எதை காப்பாற்ற வேண்டும் என்றே புரியாமல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாய் போராடிக்கொண்டு இருக்கிறோம்!  இதில் வேதனைக்குரிய விடயம், நம்மில் சிலர் கலப்பட காளையினத்தை படமாக வைத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிப்பது தான்!

ஏற்கணமே மஞ்சள் வேப்பம் கற்றாழை என்று நமது தாவரங்களை இழந்தாயிற்று. இன்னும் , ஆடமாடுகளையும் இழந்து விட்டு - "வல்லரசு இந்தியா" என்று கனவு காண்பதன் அர்த்தம் என்ன ? 

யோசிப்போம் - களமிறங்கிய நாம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்டறிவோம் - சரியான திசையில் போராட்டத்தை கொண்டு செல்வோம் ! 

பின்குறிப்பு : இதை எழுதுவதற்கு முன்பு சில ஆய்வுக்கட்டுரைகளை படித்து விட்டே எழுதி இருக்கிறேன். அவற்றில் ஒன்றை குறிப்பிடவும் செய்துள்ளேன்!

புதன், 18 ஜனவரி, 2017

தடை அதை உடை

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணக்கங்கள்!

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
தமிழ்நாட்டு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!

காளைகளுக்காக 
களம் இறங்கிய 
எங்குல சிங்கங்களுக்கு 
கை கூப்பிய வணக்கங்கள் !

இனிக்க இனிக்க பொங்கலிட்டு 
இல்லங்களில் இட்ட பொங்கலை 
நம் உணர்வுகளோடு பங்கிட்டு 
குடும்பத்துள் ஒருத்தனாய் 
கருதும் காளைகளுக்காக 
கூட்டமாய் கூடியிருக்கும் 
வீரர்களுக்கு..!

பாஞ்சு வரும் காளைகளை,
நெஞ்சில் தாங்கி 
கடலோரமாய் குவிந்த 
கன்றுகளை 
கயவர்கள் கூட்டம் 
கொடுந்திறையிட்டு 
அடக்க தொடங்கும் தருணத்தில் ,
வாழ்த்துப்பாக்களுக்கு 
இடமில்லையென்றாலும் 

எச்சரிக்கைப்பாக்கள் தொடுக்கிறோம்  ,
காண்பிக்காதீர்கள்  வீரத்தை,
கட்டுக்கடங்காது நிற்கும் 
எங்குல கன்றும்  காளைகளும் 
அறப்போர் நிறுத்தி ,
தீஜ்வாலை உமிழ்வார்கள் . . !

நியூயார்க்கில் நான் . . ! - 4

அழைப்பு இணைக்கப்பட்டதும் கத்தியது நான் தான். பதறிப் போய் அம்மாவும் மாமியும் உள்ளே ஓடி வர, நான் , " அந்த பக்கம், நீங்க பார்த்த பையன் அவர் அம்மாவோட இருக்காரு. நான் தனியா பேசறது, எனக்கும் ரெண்டு பெரு துணைக்கு நில்லுங்கோ" என்றேனே, இருவருக்கும் கோபம் தலைக்கு ஏறியது, முகம் காமிக்க முடியாதே. ஏனென்றால் அந்த பக்கம், நேரலை வேறு. அதனால் வேறு வழியேதும் இல்லாமல், unmute போட்டு பேச தொடங்கிவிட்டோம். சிறிது குசலம் விசாரணை. பின்பு நாங்கள் இருவரும் ஒரு இருபது நிமிட சம்பாஷணை ( இங்கு தான் நான் தலைவருக்கு எச்சரிக்கை தந்தது, என் குறும்பும் அமைதியின்மையை பற்றியும்) . அடுத்த இரு நாட்களில் , தலைவர் திருமணத்திற்கு சரி சொல்ல, எனக்கோ ஒரே ஆச்சரியம் தாளலை. என் பெற்றோர்களுக்கோ , சந்தோசம் சொல்லி மாளலை. அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்குள், நிச்சிய புடவைகள், நகை, மண்டபம், இப்படி எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. இதில் மிக வியப்பான விஷயம், நான் தலைவரிடம் பேச தொடங்காதது தான் . இதுல வேற நிச்சியதார்த்தத்துல நடந்தது, இன்னும் பெரும் சிரிப்பு. 
முழுதாய் இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் . இடையில் நாங்கள் அவ்வளவாக கதைத்துக்கொள்ளவில்லை. நிச்சிய மேடையில் நான் மட்டும் நிற்கிறேன். "மாப்பிளை" காணோம். அவர், அமெரிக்காவில் இருந்து கொண்டு பங்கு கொள்கிறார். இந்த சாஸ்திரங்களும் வழக்கங்களும், பெரியவர்களின் அலும்பும் , அப்பப்பா... 
எனக்கு ஒரு ஒன்றேகால் அடி முடி உண்டு. வெறும் அதில் பின்னி கொஞ்சம் பூ வைத்து இருக்க வேண்டியது தானே.. அதற்கு கொஞ்சம் சவுரி சேர்த்தார்கள். அலங்கார பெண்மணிக்கு சரியாக சவுரி வைத்து பின்ன தெரியவில்லை. அவசரமாய் எதோ என் தலையில் காமெடி செய்துவிட்டு ஓடி போயிட்டாள் .
பூ பத்தவில்லை என்று சுமார் 20 முழம் பூ , நிச்சியம் ஆரமித்து உடன் என் மாமிகள் தலையில் சுத்த தொடங்கினார்கள். மேடையில் திடீரென என்னை கூப்பிட்டு இரண்டு மாலை போட்டார்கள். ( "மாப்பிளை"யின் மாலையோடு எனதுமாம் ). உடலில் கணம் கூடியது. இரண்டு முறை நமஸ்காரங்கள் வேறு. இதுவரை நான் நேரிலே பார்க்காத அந்த மாப்பிள்ளைக்கு ! சடங்குகள் செய்து வைத்த என் பெரியப்பா , ஒவ்வொரு முறையும் என்னை "சபைக்கு நமஸ்காரம் செய் மா குழந்தை" என்று பயந்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தார். பின்னே, என் அராஜகம் அவருக்கு நன்றாக தெரியுமே! எங்கே அவரையும் நான் தாளித்து விடுவேனோ என்ற பயம். 
இதற்கு இடையில், எங்க தலைவர், ஒய்யாரமாய் , நேரலையில் வந்து மண்டபத்தில் உள்ள அனைவருக்கும் தரிசனம் தந்து இருக்கிறார் , எனக்கு மட்டும் இல்லை! முகூர்த்த பட்டு ஓதி வைத்த  உடன், இடம் வலம் பார்த்தேன், யாரும் தென்படவில்லை உதவிக்கு வர, நான் பாட்டுக்கு போய் புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்துவிட்டேன் துள்ளிக்கொண்டே . அங்கு இருந்த வாண்டுகள், என் புடவையை இழுத்து, "சித்தி நீ இவ்வ்ளோ சீக்ரம் கட்டிண்டுவந்துட்டே?" என்று ஆச்சரிய பட, பீதியில் என் அக்காவும் அண்ணியும் என்னை பிடித்து மெதுவாய் நடக்க வைத்து, மேடைக்கு அழைத்தனர். 
கடைசியாய், நாத்தனார் முடித்தல் என்று, என் மடியில், மட்டையுரிக்காத தேங்காயுடன் சில பல சாமான்களையும் சேர்த்து கட்டிவிட, பின்னுக்கு பின்னல் இழுக்க, முன்னுக்கு மட்டைத்தேங்காய் இழுக்க, சரக்கடிக்க போதைப்பெண் போல் தள்ளாடிக்கொண்டே நமஸ்காரங்கள் முடிந்தது, என் பெரியப்பவை முறைத்து கொண்டே, "மாப்பிள்ளை" யை திட்டி கொண்டே . .
சுமுகமாய் முடிந்த நிச்சியதார்தம் கடைசியில், மாப்பிள்ளையின் மாமா, தன தொலைபேசியை என்னிடம் தந்து,"உன் வருங்கால கணவர் திரையில் இருக்கிறான் பேசிக்கொள் " என்றவுடன், எனக்கு வந்தது முதல் பயம் . "ஐயோ, இவருக்கா என்னை நிச்சியம் செய்தார்கள் " பயபீதியில் வெளிறியது என் முகம் . . 

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

இன்று முதல் அவள் தேய தொடங்கினும்,
பட்டொளி வீசி என் இரவுகளை விடியலில் தள்ளுவாள்!
அவள் போராடா காரிருள் மேகமில்லை,
அவள் ராஜ்ஜியத்தில் வானமே எல்லை!