சனி, 24 டிசம்பர், 2016

நியூயார்க்கில் நான் . . ! - 2

சரி , கடைளில் தான் இப்படி என்றால், பேருந்துகளிலும் இதே கதை தான்,, பேருந்தில் இருந்து இறங்கி பின் ஓட்டுனருக்கு  டாடா சொல்வதும் இயல்பான ஒன்று தான் ! இப்படியாக வெளியுலகத்தை விசித்திரமாய் நான் பார்க்க, என்னை பெற்றவர்கள் என்னை விசித்திரமாய் பார்க்க தொடங்கினார்கள். 
அட ஆமாம். முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் இல்லையா? நான் சரியான குறும்புக்காரி. அறந்த வால் அப்படின்னும், குட்டி பிசாசு அப்படின்னும் பட்ட பேரு / செல்ல பேரு எல்லாம் உண்டு. அப்படி பட்ட எனக்கு ஒரு அமைதியான சமத்தானா ஆத்துக்காரர். ( இந்தா, நாங்க எல்லாம் நேர்மையானவங்க . பரிசம் போடும் போதே, எனக்கு அமைதினா என்னான்னே தெரியாது அப்படின்னு எச்சரிக்கை தந்துபுட்டோம்!) .
எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க என் அப்பா அம்மா பட்ட பாடு! நான் எழுதறதெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான். பயோடெக்னாலஜி - உயிரி தொழில்நுட்ப அறிவியல் அப்படிங்கிற பட்டப்படிப்பை 6 வருஷம் படிச்சு முடிச்சு, படிக்கும்போதெல்லாம், ஆறு மணி பேருந்துக்கு அஞ்சரைக்கு அம்மாக்கிட்ட ஏத்து வாங்கிண்டே எழுந்து, அப்பாகிட்ட பேச்சு வாங்கிண்டே வண்டியிலே கூட்டிண்டு போக சொல்லி, ராத்திரி ஏழு மணி வரைக்கும் ஆராய்ச்சியில் மூழ்கி, பேராசிரியர்களிடம் "பெண் பிள்ளை அம்மா நீ. நேரம் காலமா வீடு போய் சேரு " அப்படின்னு புத்தி சொல் கேட்டுகிட்டு, எங்க அம்மா ஆயுசை அறையாயுசாய் குறைச்சு , பாத ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு, கேம்ஸ் விளையாடிட்டு, போர்வையை இழுத்து போர்த்திக்கிட்டு உருண்டேன்னா அடுத்த நாள் காலையில அதே கதை. இது தினசரி நடவடிக்கை. பரிக்ஷை சமயத்தில், ஒரு நாள் முன்னாடி, கல்லூரி நூலகத்தை ரெய்டு விட்டு, அடுத்த நாள் பாட புஸ்த்தகத்தை பொறுக்கி எடுத்து, வீடு வந்து , எனக்கு பிடித்த பாடங்களை மட்டும், "ஆழமாய்" படித்து, பகலில் போய் பரிக்ஷை எழுதிவிட்டு, நன்பகல் வீடு வந்து, சமைத்து வைத்ததை ( நான் இல்லைங்கோ , என் அம்மாவோ, தம்பியோ சமைச்சு வெச்சு இருப்பாங்க) நல்லா மொசுக்கிவிட்டு தூக்கம். அன்றிரவு வீட்டில் அனைவரும் தூங்க போகும் போது என்னை எழுப்பி விடுவார்கள். அவர்கள் தூங்கியபின்பு நான் படிக்க ஆரமித்தால் விடியும் பொழுது அவர்களை எழுப்பி விட்டு, நான் உறங்க போவேன். கல்லூரி காலம் இப்படியாக, வேலைக்கு போன காலம், கொஞ்சமே கொஞ்சம் மாறுதலோடு . ஆறு மணி பேருந்துக்கு எழும்பாமல், 8.10 ரயிலிற்கு 7.45க்கு எழுந்துப்பேன் . முன்னிரவு வைத்த உப்புமா / காய் / கஞ்சி எதோ ஒன்னு சாப்பிட கையில் எடுத்துக்கொண்டு, குடு குடு ன்னு ஓடறது தான் பொழப்பு! தனியாக தங்கி இருந்ததால், என் அறையை நானே சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வாரம் ஒருமுறை அந்த இன்னல். (நல்லவேளை, வீட்டோடு ஒரு பாட்டி இருந்தார்கள். எனக்கு உதவிக்கு!)
இப்படியாகப்பட்ட எனக்கு, இந்த பொண்ணு பார்க்கும் படலம், பாட்டு படறது," வாங்க பழகலாம்" ன்னு வழிஞ்சுட்டு அப்பறம் , "பொண்ணு ரொம்ப போல்டு டைப். வெளிப்படையா பேசறா. எனக்கு பிடிக்கலை" அப்படின்னு பிட்டு போட்டு எஸ்கேப் ஆகிறது எல்லாம் சுத்தமா ஆகாத காரியம். அதனால, என் தலைல கல்யாண "சுமை" ( அப்போ அப்புடி நெனச்சுப்புட்டேனுங்கோ) ஏத்தி வைக்க இருந்த அப்பா அம்மா கிட்ட, " நல்ல குடும்பம் - கூட்டு குடும்பம் னா டபுள் ஓகே. மத்தபடி உங்களுக்கு ஓகே னா , எனக்கு ஓகே. இந்த மீட்டிங்,டேட்டிங், அவுட்டிங், இதெல்லாம் நான் பண்ண மாட்டேன். பொண்ணு பாக்க வந்து இன்டர்வ்யூ பண்ணினா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் " அப்படின்னு பற்பல விதிமுறைகளை விளக்கி , வரன் தேட சம்மதம் கொடுத்தேன்.
அறிந்தவர்கள், அங்காளி பங்காளி அப்படி இப்படின்னு , ஒரு வரன் வந்திருக்கு அப்பா அம்மாக்கு. கூட்டு குடும்பம் - டிக். நல்ல மனிதர்கள் - டிக் . அப்படி அவர்களே டிக் போட்டுகொண்டு, ஒரு சந்திப்பு தினத்தை முடிவு செய்திருக்கிறார்கள். ஞாயிறு காலை, "மாப்பிள்ளை வீட்டார்" வருவதாக, சனிக்கிழமை அம்மா தகவல் தருகிறார்கள். வந்ததே கோபம் . நான் போராளி ஆகிவிட்டேன். எத்துணை சொல்லியும், பெண் பார்க்கும் படலாமா?
குடும்ப நண்பர், அண்டை வீட்டாரின் சொந்தம் என்றெல்லாம் அப்பா சமாதானப்படுத்த தொடங்கினார். "நான் பொம்மை போல் புடவை கட்டி முன்னாடி நிற்க மாட்டேன்" ( எனக்கு சும்மா புடவை கட்டிக்கொள்வது என்றாலே வெகு பிரியம். அனால், அந்த படலத்தை எதிர்க்கும் பொழுது, புடவையா என்று வீம்பு!). நண்பரின் தகவல் படி, ஒரு சிறு குழந்தையும் உடன் வருவதாய் தகவல். அம்மாவும் மாமியும் அந்த பிள்ளைக்கு "பொம்மையும் சாக்கலேட்டும் " வாங்கி வைத்தனர் . " எனக்கு சாக்கி ?" என்றபடி நான் கேட்க, "புடவை கட்டி கொஞ்சம் அமைதியாய் இருக்க முயற்சி பண்ணினால் உண்டு " என்ற பதில் வந்தது. சரி, "சாக்கி " கிடைக்குமே, என்று கொஞ்சமே கொஞ்சம் குறும்புத்தனத்தை ஒளித்து வைக்க முயற்சி பண்ணி கொண்டிருந்தேன்.
"மாப்பிளை வீட்டார்" வந்தனர், கூடவே , அந்த குழந்தையும். ரஸகுல்லா மாதிரி ஒரு குழந்தை. அவனையே நான் பிச்சு பிச்சு சாப்பிட எண்ணி கொண்டு இருந்தேன். அவன் கையில், "dairy Milk Silk " வேறு. ஜாலியாக , போய் ஊஞ்சலில் அவர்கள் முன் உக்காந்து கொண்டு ஊஞ்சல் ஆடிய வண்ணம், குட்டி பையனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்.
படிப்பு,பட்டமளிப்பு, வேலை இப்படி பல தருணங்களில் எனக்காக பயப்படாத அப்பா அம்மா, அன்று அரண்டு கொண்டு இருந்தார்கள். குட்டி பையனை கவனித்து கொண்டு இருந்த எனக்கு, பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தது கருத்தில் பதியவில்லை.
"நீ என்னம்மா படித்து இருக்கிறாய்?" மாப்பிளை வீட்டாரின் கேள்வி . அது கூட நான் கவனிக்கவில்லை . அப்பா பதில் சொன்னார் போலும்.
மீண்டும், " யோகேஷ் படிச்சாப்பல அதே படிப்பா?" இம்முறை மாமி என்னை உசுப்பி விட , நான் சுதாரித்தேன். என்ன பேசுகிறார்கள் இவர்கள்? நான் முழிக்க, கூடவே ஒரு கேள்வி . "யார் யோகேஷ்?" என்றேன் ....

தொடர்ந்து எழுதுவேன் . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக